பெற்றோர்களும்-மாணவிகளும் பார்க்க வேண்டிய சினிமா..



             இது வரை எனது பிளாக்கில் சினிமா பற்றி எழுதியதில்லை..கல்வி சம்பந்தமான எனது அனுபவங்களை எழுதுகிறேன்.. ஒரு மாறுபட்ட முயற்சியாக  வழக்கு எண் 18/9 - சினிமா பற்றி எழுதவேண்டியதாகி விட்டது..இது கல்வி பற்றி இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இன்று மாணவிகள் கல்வியை இழப்பதைத் தடுக்கக்கூடிய முறையில் ஒரு விழிப்புணர்வு படமாக நான் பார்ப்பதால் இதை எழுத வேண்டியதாகி விட்டது...
  
             காலம் மாறிக்கொண்டே வருகிறது...சினிமா என்பது மக்கள் மனதில் ஆழமாக ஊடுருவி, மனதில் மட்டுமல்ல உடல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. சுமார்.. 40/50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கதாநாயகர்களின் காதலில் ஒரு முதிர்ச்சி இருந்தது..சுமார் 30 வயதிற்கு மேலானவர்கள், குடும்பத்தை நடத்திட ஒரு வேலையோ, தொழிலோ இருப்பவர்கள் தான் காதலிக்கவேண்டும் என்ற பிம்பத்தை  அன்றைய சினிமாக்கள் நமக்கு ஏற்படுத்தியது..பின் ஜெயசங்கரும், ரவிச்சந்திரனும், கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் வந்த போது 20/25 வயதுள்ள இளைஞர்கள் காதலிக்கலாம் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தியது...பாரதி ராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் வந்த போது, மீசை முளைக்காத பள்ளி மாணவர்கள் கூட காதலிக்கலாம், குடும்பம் நடத்தலாம் என்ற மாயச்சித்திரத்தை ஏற்படுத்தியது..இன்றும் இது தொடர்கிறது..சின்னப்பசங்களும், சின்னப்புள்ளைகளும் காதலித்து கட்டிப்பிடித்து திருமணம் செய்வதைக்காட்டும் படங்கள் அவர்கள் வருமானம் இன்றி வாடுவதைக்காட்டுவதில்லை.
.
              .பெண்ணின் திருமண வயது 21 என்று அரசு விளம்பரங்கள் கூறினாலும்  பெண்ணின் காதலிக்கும் வயது 12/13 என்று சினிமாக்கள் கூறுகின்றன.....இதனால் என்ன நடக்கிறது?  இது நான் கண்ணால் கண்டு, காவல் நிலையத்திற்கும், பெற்றோர்களின் வீட்டிற்கும் அலைந்த அனுபவம்..  தமிழகத்தின் ஒவ்வொரு பெண்கள் பள்ளியாகட்டும், அல்லது இருபாலர் படிக்கும் பள்ளியாகட்டும், பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு, காதல், கேர்ள்பிரண்ட், பாய் பிரண்ட் என்ற கலாச்சாரத்தால்  உடல் இச்சைக்கு முதலிடம் கொடுத்து, பள்ளிப்படிப்பை  கைவிடும் மாணவிகள் ஆண்டிற்கு குறைந்தது 5 பேர்களையாவது  ஒவ்வொரு பெண்கள் பள்ளியிலும் காணலாம்..போதாதற்கு காதலர் தின கொண்டாட்டங்கள் என்று  ஊடகங்கள் வாயிலாக (பன்னாட்டு அழகு சாதன கம்பெனிகளின் விளம்பர உத்தியால்) 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளிடையே கூட தனக்கு ஒரு பாய்பிரண்ட் இல்லையே, ஒரு கேர்ள் பிரண்ட் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..

                ஒரு புறம் தமிழகரசு பெண்கல்வி பெருக பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்ற வேலையில், இந்த பாழாய்ப்போன சிறுவயது உடல் ஈர்ப்பை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு, ஆண்டுக்காண்டு மாணவிகள் படிப்பை விட்டுப்போவது, தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது..கடந்த 20 ஆண்டுகளில்  ஆசிரியரே மாணவியை அழைத்துக்கொண்டு ஓடியது, 8-ம் வகுப்பு மாணவி எவனோ ஒரு பனியன் தொழிலாளியை நம்பி ஓட, அவன் அந்த மாணவியை  ஒருவாரம் திருவாரூரில் வைத்திருந்து விட்டு, அவன் மாமனிடம் ஒப்படைக்க, அவன் அந்த மாணவியை கேரளாவில் ஒரு வீட்டில் சமையல்காரியாக 1000ரூபாய்க்கு விற்றது வரையும் கண்டுபிடித்து ,மாணவிகள் இப்படி முள்ளில் மேல் விழுந்த சேலையாக மாறுகிறார்களே என கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்..இந்த மாணவிகளுக்கு விழிப்புணர்வு வருவது போல யாராவது ஒரு சினிமா எடுக்க மாட்டார்களா என ஏங்கிக்கொண்டிருந்த எனது மனக்கவலையைத் தீர்க்கும் விதமாக வந்துள்ள சினிமாதான்  வழக்கு எண் 18/9 என்ற படமாகும். இது படம் அல்ல....மாணவிகளுக்கு ஒரு பாடம

         ஆனந்த விகடன் விமர்சனம் படித்துவிட்டு, இன்று வழக்கு எண் 18/9 
  1. பார்த்தேன். விகடன் விமர்சனம் படிக்கு முன்பு, டிரெய்லர் பார்த்ததில், பள்ளிக்கூட மாணவ-மாணவியும் ஓடிப்போகும் கதையாக இருக்கும், இதைப்பார்த்து இன்னும் மாணவிகள் உடல் ஈர்ப்பை, காதல் என தவறாகப்புரிந்து கொண்டு, பள்ளிப்படிப்பை பாதியில் முடித்துக்கொள்வதில்லாமல், தங்கள் வாழ்க்கையையும் முள்ளில் மேல் விழுந்த சேலையாக கிழித்துக்கொள்ளப்போகிறார்கள் என நினைத்துத்தான் படத்தைப்பார்த்தேன்...ஆனால் படமோ, ஒவ்வொரு மாணவியும் இந்தப்படத்தைப்பார்த்து, இன்றைய கலாச்சார சீரழிவில் இருந்து , பாய் பிரண்ட் என்ற துச்சாதனர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளத்தக்களவில் விழிப்புணர்வு அடைவார்கள் என்பது எனது எண்ணமாகும.

                      தர்மபுரி பகுதியில் குடும்ப வறுமை காரணமாக படிப்பைக்கைவிட்ட  கதாநாயகன், வட நாட்டில் முறுக்குக்கம்பெனியில் கொத்தடிமையாக விற்கப்படுகிறான்..அப்பா, அம்மா இறந்த செய்தியைக்கூட மறைத்துவிட்ட கடைக்கார கயவனிடம் இருந்து தப்பி சென்னை வருகிறான்..பசி மயக்கத்தில் பிளாட்பாரத்தில் மயங்கி விழுகிறான்..படித்த மனிதர்கள் பாதையில் இருந்து விலகிப்போகும்போது, அப்படி, இப்படி என்று வாழும் ரோசி என்ற பெண் தனது மனிதத்தன்மை காரணமாக அவனுடைய பசியாற்றி, பிளாட்பார இட்லிக்கடையில் ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்கிறாள்..அருகில் உள்ள அபார்ட்மெண்டிற்கு வீட்டு வேலைக்குச்செல்லும் கதா நாயகியை ஒரு தலை பட்சமாக காதலிக்கிறான்..சில சூழ் நிலைமை காரணமாக கதா நாயகி, இவனை ஒரு பொறுக்கியாக நினைக்கிறாள்..

                         கதா நாயகி வேலை செய்யும் மத்தியதரகுடும்பத்தின் 16 வய்து பெண் சைக்கிளில் ஆங்கில வழிப்பள்ளிக்கு செல்கிறாள்.. வழியில் இம்மாணவியைக்காணும்  ஒரு பணக்கார மாணவன் தன் வலையில் வீழ்த்த பாடத்தில் சந்தேகம் என்ற பெயரில் வீட்டிற்குள் நுழைந்து மாணவிக்குத்தெரியாமலேயே செல்போனில் அவளை பதிவு செய்து, சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறான்..மாணவியின் சக தோழிகளும் மாணவியை உசுப்பேத்தி விடுகின்றனர். இத்தொடர்பு, கடற்கரை விடுதிக்கு காப்பி சாப்பிடும் வரை கொண்டு செல்கிறது..கடலில் விளையாடிய மாணவிக்கு தனி அறை ஏற்பாடு செய்து, உடை மாற்றுவதைக்கூட செல்லில் ரகசியமாக பதிவு செய்கிறான்..வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் எதிர்பாரதவிதமாக தனது பாய்பிரண்டு மாணவனின் செல்லில் தனது படங்களைக்கண்டு அதர்ச்சியடைந்த மாணவி, அவனுக்குத்தெரியாமல் மெமரி கார்டை உருவிக்கொள்கிறாள்..மாணவனின் நட்பை கைவிடுகிறாள்..இதைப்பொறுக்காத மாணவன், காரேற்றி கொல்லப்பார்க்கிறான். இதனால் பள்ளிக்கு தனது அம்மாவுடன் தினமும் செல்கிறாள்..இதனால் வெறுப்படைந்த மாணவன் அபார்ட்மெண்ட் சென்று கதவைத்தட்டுகிறான்.  மாணவிக்குப்பதிலாக நமது கதா நாயகி வேலக்காரப்பெண் கதவைத்திறக்க, அவள் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு, ஓடி விடுகிறான்..கதா நாயகி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாள்..போலீஸ் கேஸாகிறது..வழக்க்ப்படி போலீஸ் அபார்மெண்ட் அருகில் இட்லிக்கடையில் வேலை செய்யும், வேலுச்சாமியைப்பிடித்து விசாரிக்கிறது.. பணக்கார மாணவன்மீது சந்தேகப்பட்ட மாணவி, போலீசில் அவனைப்பற்றி விபரத்தைக்கூறி, தன்னிடம் உள்ள மெமரி கார்டையும் ஒப்படைக்கிறாள்..போலீஸ் பணக்கார மாணவன் மீது எப்.ஐ.ஆர்.போட்டு விசாரிக்கிறது..பணம் ரூ.10 லட்சம் கை மாறுகிறது..பணக்காரப்பையன் தான் ஆசிட் வீசிய உண்மையான குற்றவாளி எனத்தெரிந்தும், ஏழையான கதா நாயகனை அடித்து, துவம்சம் செய்து, இனிமையாகப்பேசி, குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்கிறது.. வழக்கு 18/9 ஒத்திவைக்கப்படுகிறது. கதா நாயகன் சிறைக்குச்செல்கிறார்ன். கதா நயகனின் நண்பன் சின்னச்சாமியிடம் உண்மையைக்கூறுகிறான்..சின்னச்சாமி, கோரமான முகத்துடன் உள்ள் வேலைக்கார கதா நாயகியிடம், நடந்த உண்மையிக்கூறுகிறான்..வழக்கின் தீர்ப்பைக்கான கதா நாயகி வருகிறாள். கதா நாயகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, வேனில் புழல் சிறைக்கு அனுப்பப்படுகிறான். பணக்காரப்பையன் மூலம் கிடைத்த 10 லட்சத்தில் வீடுகட்டுவதை முடித்துவிட்ட இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் இருந்து வெளியே வருகிறார்.. கதா நாயகி, தனது மூடிய முகத்துடன் ஒரு கடிதம் தருகிறாள்..இன்ஸ்பெக்டர் கடிதத்தைப்படிக்கிறார்..அடுத்த கணம் தியேட்டரில் கைதட்டல் பலமாக ஒலிக்கிறது...ஆக்ரோசமான கிளைமாக்ஸ்... கோர்ட்டில் மீண்டும் கேஸ் மறுபரீசீலனை ..உண்மையான குற்றவாளி சிறைக்குச்செல்ல, கதா நாயகன் விடுதலை..ஆனால் கதா நாயகிக்கு 7 ஆண்டு சிறை...அவலட்சனமான கதா நாயகிக்காக கதா நாயகன்  காத்திருக்கிறான்.. 

     எனக்கு மிகவும் பிடித்த விசயம்.
             (1) மத்தியதர வர்க்கத்தில் பிறந்த மாணவி, வேலைக்காரப்பெண் மீது, ஆஸிட் வீசியவன், தன்னை ஏமாற்றிய பணக்கார மாணவனாக இருக்கும் என்று தனது சந்தேகத்தை துணிச்சலாக  காவல் நிலையத்தில் கூறி, அதற்கான மெம்மரி கார்டை தருவது.      
            (2) ஆஸிட் வீச்சால பாதிக்கப்பட்டும், உண்மையான குற்றவாளியிடம் பணம் பெற்றுக்கொண்டு, அப்பாவி இளைஞனை பலிகாடா ஆக்கிய இன்ஸ்பெக்டர் மீது துணிந்து அந்த வேலைக்காரப்பெண்(கதா நாயகி) ஆஸிட் வீசி, உண்மையான குற்றவாளிக்குத்தண்டனையும், தவறாக தண்டனை தரப்பட்ட கதா நாயகனுக்கு விடுதலையையும் வாங்கித்தருவது..
           (3) பொதுவாக போலீசும் பாம்பும் ஒன்று என்பார்கள்..அவர்களின் நட்பு கூடாது..அவர்களின் பசப்பு வார்த்தை எப்படியிருக்கும் என்பதை, இதில் வரும் இன்ஸ்பெக்டர் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்..
            (4) ஆஸிட் வீசிய பெண்மீது, போலீஸ்காரர்கள் அடித்து துவைக்கும்போது, பெண் வக்கீல்கள் ஓடி வந்து (வழக்கமான சினிமாவில் வில்லன் நடுவீதியில் பெண்ணைப்பலாத்காரம் செய்யும்போது 1000-ம் பேர் இருந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்கள்)
    அந்தப்பெண்ணைக்காப்பாற்றுவது. என படம் முழுவதும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
    படம் முடிந்த பின் தான் வழக்கமான சினிமாக்களில் வரும் அட...ஒரு சண்டையில்லை...வெளி நாட்டு வீதிகளில் அரைகுறை ஆடையணிந்து பாட்டுப்பாடும் காதல் காட்சிகள் இல்லை...மொக்கை போடும் நகைச்சுவை காட்சிகள் இல்லை.. என உணர முடிகிறது..
                         53 வருடங்களாக சினிமா பார்க்கிறேன்...இப்படி ஒரு படத்தைப்பார்த்ததில்லை...பாலாஜி சக்திவேல் அவர்களே...உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்..

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..